ராமரை கற்பனை பாத்திரம் என்று கூறிய காங்கிரஸ் கட்சி ராம நவமியை கொண்டாட சொல்வது ஏன்? – மத்திய பிரதேச பாஜக கேள்வி

போபால்: ராமரை கற்பனை கதாபாத்திரம் என்று கூறிய காங்கிரஸார் ராம நவமியை கொண்டாடுவது ஏன் என்று மத்திய பிரதேச பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஏப்ரல் 10-ம் தேதி ராம நவமியையும் ஏப்ரல் 16-ம் தேதி அனுமன் ஜெயந்தியையும் விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகின்றனர்.

தலைவர்கள் ஏற்பாடு

இதுகுறித்து மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் பங்கஜ் சதுர்வேதி கூறியதாவது: ராமரும் ராமர் பாலமும் கற்பனை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்துக்களை தீவிரவாதிகளாக சித்தரித்தனர். தற்போது ராம நவமி, அனுமன் ஜெயந்தியை கொண்டாட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அவர்கள் ராம நவமியை கொண்டாடுவது ஏன்? இது அவர்களின் கபட நாடகம். இவ்வாறு பங்கஜ் கூறினார்.

ம.பி.யில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்துக்களின் வாக்கு களை பெற காங்கிரஸ் கட்சி ராமநவமி கொண்டாடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

– பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.