“பாஜக, ஆர்.எஸ்.எஸ் நாட்டை சாதி, மத அடிப்படையில் பிரிக்க முடிவுசெய்துவிட்டன!" – அசோக் கெலாட்

இந்து நாட்காட்டியின்படி புத்தாண்டின் முதல் நாளான ஏப்ரல் 2 மற்றும் ராம நவமி தினத்தன்று, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. அதிலும், கடந்த ஏப்ரல் 2-ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம், கரோலி நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்து அமைப்பினருக்கும், முஸ்லிம்களுக்குமிடையே வெடித்த கலவரத்தில் அங்கிருந்த பல்வேறு வாகனங்கள் மற்றும் கடைகள் தீக்கிரையாகின. மேலும், தொடர்ச்சியாக நடைபெற்ற இது போன்ற இந்து-முஸ்லிம் கலவரங்களில், பாதிக்கப்பட்ட மாநிலங்களின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க அரசைக் கடுமையாகச் சாடிவந்தன. இந்த நிலையில், “பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் நாட்டை இந்து-முஸ்லிம் இடையே பிரிக்க முடிவுசெய்துவிட்டன” என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்திருக்கிறார்.

பாஜக

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கரோலி கலவரத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அசோக் கெலாட், “கரோலியில் அவர்களின் (பா.ஜ.க) சோதனை நடந்தது. ஆனால், அதை நாங்கள் கட்டுப்படுத்தினோம். பின்னர் இதைத் தொடர்ந்து ராம நவமி அன்று ஏழு மாநிலங்களில் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின, புல்டோசர்களும் இயக்கப்பட்டன.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

இந்த நாட்டை இந்து-முஸ்லிம், மதங்கள் மற்றும் சாதிகளுக்கு இடையே எப்படிப் பிரிக்க வேண்டும் என்று பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் முடிவுசெய்துவிட்டன. இது அவர்களுடைய அஜெண்டாவின் ஒரு பகுதி, அதுமட்டுமல்லாமல் இது வெறும் ஆரம்பம் மட்டுமே. அவர்கள் இன்னும் இது போன்ற பெரிய தாக்குதல்களை முதல்வர்கள் மீதும், அரசாங்கங்களின் மீதும் அவ்வப்போது நடத்துவார்கள்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.