பெர்லின் : ஜெர்மனியில் ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, நுாற்றுக்கணக்கான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் விமான சேவை நிறுவனமான லுப்தான்ஸாவில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். விமானிகள் மற்றும் இதர ஊழியர்கள், தங்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நிர்வாகம் ஏற்க மறுத்தது.இந்நிலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர்.
இதையடுத்து, பிராங்பர்ட்டில் 678 விமானங்களையும், முனிச்சில் 345 விமானங்களையும் நேற்று ரத்து செய்ததாக லுப்தான்ஸா ஏர்வேஸ் தெரிவித்தது. போராட்டம் தொடர்ந்தால் இன்று அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்யவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான சேவை பாதிப்பால் பிராங்பர்ட்டில் 92 ஆயிரம் பயணியரும், முனிச்சில் 42 ஆயிரம் பயணியரும் கடுமையாக பாதி க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லுப்தான்ஸா நிறுவனத்துடன் விமான நிலைய ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement