“அதிமுக-தான் உண்மையான எதிர்க்கட்சி; மற்றவர்கள் டம்மி பீஸ்கள்” – சொல்கிறார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்

“ ‘மத்திய பா.ஜ.க-வுக்கு தி.மு.க பயப்படுகிறதா?’ எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியிருக்கிறாரே?”

““கே.எஸ்.அழகிரி முதலில் கார்த்தி சிதம்பரத்தைத்தான் கேள்வி கேட்க வேண்டும். தி.மு.க-வுக்கும் திராவிட மாடலுக்கும் எதிராகவும் தினமும் ஒரு ட்வீட் போட்டுக்கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்து பா.ஜ.க-வுக்குப் பயந்துவிட்டீர்களா எனக் கேட்க வேண்டும். அதைவிட்டுவிட்டு எங்களிடம் கேட்பது கவனத்தைத் தன்பக்கம் ஈர்க்கும் உக்தியாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.”

மாதிரி பேனா சின்னம்

“பேனாவுக்கு நினைவுச் சின்னம் அமைப்பது தொடங்கி தி.மு.க அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றனவே?”

“தூங்கி எழுந்ததிலிருந்து தூங்கச் செல்லும் வரையில் திமுக மீது எத்தனையோ குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டே இருப்பார்கள். எங்கோ ஒரு மூலையில் குண்டூசி விழுந்தால்கூட அதற்கும் காரணம் திமுக-தான் என்பார்கள். அண்ணாவுக்கு அருகில் கலைஞருக்கு நினைவிடம் கொடுக்க மாட்டோம் என ஒரு ஆட்சி சதி செய்தார்கள். நீதிமன்றம் வரை சென்று உரிமையை நிலைநாட்டினோம். இன்றைக்குக் கலைஞருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். தி.மு.க அரசின் சாதனைகளை மக்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதுபோதும் எங்களுக்கு.”

“பேனாவுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதைத்தானே கேள்வி கேட்கிறார்கள்?”

“பேனாவுக்கான நினைவுச் சின்னம் தி.மு.க-வுக்காக உருவாக்கப்படவில்லை. கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளில் நிறைந்திருப்பவர் கலைஞர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் எதிர்கால சந்ததியினர் தலைவர் பற்றி அறிந்துகொள்ளவுமே இந்த முடிவு. பேனா என்பது அரசியல் அடையாளம் அல்ல. உணர்வின் வெளிப்பாடு. இது வீண் செலவு என்று சொல்பவர்கள் மேலாதிக்க மனநிலையில் இருந்து சொல்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அந்த மேலாதிக்கத்தின் மேலே நாங்கள் நினைவுச் சின்னங்களை அமைப்போம்.”

“வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே எனக் கேட்டால் நிதிப் பற்றாக்குறை என்கிறார்கள். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது என்கிறார்களே?”

“நினைவுச் சின்னங்கள் மட்டுமேவா வைத்துக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் நிதிப்பற்றாக்குறைகளுக்கு இடையிலும் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாதவற்றையும் சேர்த்துப் பல நூறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம். 80 கோடி செலவு செய்வது பிரச்னை இல்லை. கலைஞருக்கு நினைவுச் சின்னம் அமைப்பது தேவையில்லாதது என அவர்களின் ஆழ்மனதில் ஒரு வன்மம் உருவாகிவிட்டது. பல கோடி மக்களின் உணர்வோடு கலந்தவர் கலைஞர். அவருக்கு நினைவுச் சின்னம் அமைப்பது அவர்களின் உணர்வோடு தொடர்புடையது. பண்பாட்டின் ஒரு பகுதி. என்னைக் கேட்டால் திருவள்ளுவர் சிலைபோல மெரினாவில் கடலுக்குள் கலைஞருக்குச் சிலை வைத்து, அவரின் கையில் பேனாவைக் கொடுக்க வேண்டும் என்பேன். இதை என் கோரிக்கையாகவே முதல்வருக்கு வைக்கிறேன்.”

முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவிடம்

“வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நினைவுச் சின்னங்களை அமைக்கிறீர்கள் என்பதுதானே விமர்சனம்..?”

“மக்கள் அப்படி எந்த விமர்சனமும் வைக்கவில்லையே. மாறாக இவ்வளவு நிதிப் பற்றாக்குறைக்கு இடையிலும் முதல்வர் ஒவ்வொரு திட்டமாகச் செயல்படுத்துகிறாரே. கொடுத்த வாக்குறுதிகளில் 75 சதவிகிதத்தை நிறைவேற்றிவிட்டாரே என்று மக்கள் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள். உண்மையில் தி.மு.க அரசைச் சிறுமைப்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள்தான் இந்த ஆயிரம் ரூபாயைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார். ஏன் இவர்களுக்கு நிறைவேற்றாத ஒரு சில வாக்குறுதிகள் மட்டும் நினைவில் இருக்கின்றன. நிறைவேற்றிய எந்த வாக்குறுதிகளும் நினைவில் இல்லை. தெளிவாக ஒன்றைச் சொல்கிறேன். எங்களின் வாக்குறுதிகள் ஐந்து ஆண்டுகளுக்கானது. நிதி நிலையைச் சரி செய்துகொண்டே அனைத்தையும் விரைவில் நிறைவேற்றுவோம்.”

“கள்ளக்குறிச்சி விவகாரத்தைக் காவல்துறை சரியாகக் கையாளவில்லை என்ற விமர்சனம் எழுந்ததே?”

“கள்ளக்குறிச்சியில் நடந்தது திட்டமிட்ட வன்முறை என்பதை நீதிமன்றமே சுட்டிக் காட்டியிருக்கிறது. சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் கற்பனைக்கு எட்டாத எல்லாவற்றையும் பேசுகிறார்கள். முதல்நாள் ஒன்றைப் பேசுகிறார்கள். அடுத்தநாள் மற்றொன்றைப் பேசுகிறார்கள். காவல்துறை சமூக வலைதளங்களில் பொய்களைப் பரப்பி யாரெல்லாம் கலவரத்தைத் தூண்டினார்கள், இந்தக் கலவரத்துக்குப் பின்னணியில் இருக்கும் அமைப்புகள் யார் எனப் பல விஷயங்களை விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எதை விசாரிக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை காவல்துறையிடம் சொல்லுங்கள். நேரடியாகச் சென்று எத்தனைபேர் ஆய்வு செய்து தகவல்களைத் திரட்டினார்கள்? ஊடகங்கள் உண்மைகளைக் கொண்டு வாருங்கள்.

கள்ளக்குறிச்சி கலவரம்

அண்ணாமலையின் முன்னால் வைக்கும் கேமராக்களை எடுத்துக்கொண்டு சென்று கள்ளக்குறிச்சி சென்று விசாரிக்க எது தடுக்கிறது. சதிக் கோட்பாடுகளை உருவாக்கி தி.மு.க அரசு செயல்படவில்லை என்ற பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள்.”

“தி.மு.க அரசு சோசியல் மீடியாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுவதாக இருப்பதாக எழும் குற்றச்சாட்டு குறித்து உங்கள் பார்வை என்ன?”

“கொரோனாவை எப்படிக் கையாண்டோம், குழந்தைகளுக்குக் காலை உணவுத்திட்டம், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவுள்ளோம். இன்னும் ஆயிரம் திட்டங்கள் இப்படிச் சொல்ல முடியும். இவையெல்லாம் சோசியல் மீடியாவிலா செய்தோம். சோசியல் மீடியாவில் இன்னும் நாங்கள் தீவிரமாகச் செயல்படவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. நாங்கள் பெரிய இயக்கம், மக்கள் இயக்கம். சோசியல் மீடியாவில் கட்சி நடத்த எந்த அவசியமும் இல்லை. தி.மு.க-வின் கிளைக்கழகம் இல்லாத ஒரு கிராமம்கூட தமிழ்நாட்டில் இல்லை. 75 ஆண்டுகளாக வளர்ந்து நிற்கும் ஆலமரம் தி.மு.க. சோசியல் மீடியா வருமுன்பு எத்தனைமுறை இங்கே ஆட்சி நடத்தி இருக்கிறோம். சோசியல் மீடியாவை நம்பி சீமானும் அண்ணாமலையும்தான் இருக்கிறார்கள். நாங்கள் மக்கள் முன் இருப்பவர்கள்.”

அதிமுக – திமுக

“`தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி யார் என்ற இடத்துக்குப் பலத்த போட்டி இருக்கிறதே?”

“யார் வேண்டுமானாலும் அவர்களின் ஆசைக்குத் தங்களை எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், எங்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க-தான் எதிர்க்கட்சி. மற்ற எல்லோரும் டம்மி பீஸ்கள். சில்லுண்டிக் கட்சிகள் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ள ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள் அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.