75வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

75வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து, தலைநகர் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நம் நாட்டிற்கு கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. இதை அடுத்து, ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியான நாளை, நம் நாட்டின், 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாட மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில் நாளை நடைபெற உள்ள பிரம்மாண்டமான விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுகிறார். இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. செங்கோட்டையை சுற்றிலும் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் வரை, அதன் 5 கிலோ மீட்டர் பரப்பளவில் பட்டம் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் பிற அமைப்புகளின் ட்ரோன் தடுப்பு அமைப்புகள் நிறுவப்படுகின்றன.

டெல்லி பாதுகாப்பு பற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “செங்கோட்டையை சுற்றிலும் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தி இருக்கிறோம். அவற்றில் பதிவாகிற காட்சிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. மதிய உணவு டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள், ரிமோட் கண்ட்ரோல் கார் சாவிகள், சிகரெட் லைட்டர்கள், கைப்பெட்டிகள், கைப்பைகள், கேமராக்கள், பைனாகுலர்கள், குடைகள் உள்ளிட்டவை டெல்லி செங்கோட்டை வளாகத்தில் அனுமதிக்கப்படாது” என தெரிவித்தார்.

டெல்லி சட்டம் – ஒழுங்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் தீபேந்திர பதக் கூறும்போது, “டெல்லியில் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை போடப்பட்டு உள்ளது. 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, பட்டங்களையோ, பலூன்களையோ, சைனீஸ் லாந்தர்களையோ பறக்க விட்டால் தண்டிக்கப்படுவார்கள். வான்வழி தளங்கள், ஆளில்லா மற்றும் ஆள் உள்ள பறக்கும் பொருட்களில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் டெல்லி செங்கோட்டையில் ரேடார்கள் பயன்படுத்தப்படும்” என குறிபிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.