கர்நாடக முன்னாள் முதல்வருக்கு கொலை மிரட்டல்! 16 பேர் கைது

பெங்களூரு:  கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் 75 சுதந்திரத்தன்று, சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் படங்கள் கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் வைக்கப்பட்ட விவகாரத்தால்  அங்கு இரு மதத்தவர்களிடையே பிரச்னை ஏற்பட்டது. சிவமோகா மாவட்டம்  இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், அங்கு  ஆர்எஸ்எஸ் தலைவர் வீர சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டதற்கு க கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமைய்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது,  ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலை பெற்றவர்தான் வீர சாவர்க்கர் என்றும் அவர் கூறினார். இதையடுத்து, குடகு பகுதியில் சித்தராமைய்யாவின் கார் மீது முட்டை வீசப்பட்டது. மேலும், தொலைபேசிமூலம் அவருக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறிய நிலையில், சித்தராமையாவுக்கு  கொலை மிரட்டல் விடுத்ததாக 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 9 பேர் குஷால்நகர் பகுதியிலும், 7 பேர் மடிகேரி பகுதியிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக குடகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐய்யப்பா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.