ராஜிவ் காந்தி 78-வது பிறந்தநாள் தந்தையே, உன் கனவை நனவாக்க முயற்சிப்பேன்; ராகுல் உருக்கம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 78வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் கட்சியின் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ராகுல் தனது டிவிட்டரில்,‘தந்தையே, நீங்கள் எப்போதும் என்னுடன், எனது இதயத்தில் இருக்கிறீர்கள். தேசத்திற்காக நீங்கள் கண்ட கனவை நனவாக்க நான் எப்போதும் முயற்சிப்பேன்,’என உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும், ராஜிவ் காந்தி குறித்த புகைப்பட மற்றும் வீடியோ பதிவை அவர் பகிர்ந்துள்ளார்.

இதே போல பிரியங்கா காந்தி தனது பேஸ்புக் பதிவில்,‘21ம் நூற்றாண்டில் இந்தியாவின் முன்னணி நாடாக கொண்டு செல்ல வேண்டுமென்பதே எனது தந்தையின் கனவு. அதற்கான இரவு பகலாக உழைத்து, இந்தியாவுக்கு புதிய பாதையை தந்தார்,’என கூறி உள்ளார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில்,‘நமது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு என் அஞ்சலிகள்’என கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.