பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: பஞ்சாப் போலீஸ் அதிகாரி கடமை தவறி உள்ளார் – சுப்ரீம் கோர்ட்டு குழு அறிக்கை

புதுடெல்லி,

பிரதமர் மோடி கடந்த ஜனவரி 5-ந் தேதி பஞ்சாப் சென்றார். அப்போது அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விசாரணை குழு அளித்த அறிக்கையை நீதிபதிகள் வெளியிட்டனர்.

அவர்கள் கூறுகையில், ‘பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பயணத்தின்போது பெரோஸ்பூர் மாவட்ட சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் தனது கடமையை நிறைவேற்ற தவறிவிட்டார். போதுமான பலம் இருந்த போதிலும், பிரதமர் அந்த வழியாக வருவார் என்று 2 மணி நேரத்துக்கு முன்பே அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தும் அவர் இதைச் செய்யத் தவறிவிட்டார்’ என்று தெரிவித்தனர்.

முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு குறித்த நடைமுறைகளை அவ்வப்போது மீளாய்வு செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.