காஸ் திறந்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி காப்பாற்ற சென்றவர்கள் சிலிண்டர் வெடித்து காயம்: உயிர் பிழைத்தவர் தூக்கிட்டு சாவு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காஸ் சிலிண்டரை திறந்து வைத்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்றவர்கள் சிலிண்டர் வெடித்ததில் படுகாயம் அடைந்தனர். தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்ததால் வாலிபர் தூக்கிட்டு இறந்தார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மலையடிப்பட்டி சம்மந்தபுரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (38). இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துவிட்டு மதனிப்பட்டியில் உள்ள சகோதரி முத்துமாரி வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை மீண்டும் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் முத்துமாரி இல்லை. வீடு பூட்டப்பட்டிருந்தது. பூட்டை திறந்து உள்ளே சென்ற கோபாலகிருஷ்ணன் மன அழுத்தம் காரணமாக காஸ் சிலிண்டரை திறந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காஸ் லீக் ஆவதை கண்ட அப்பகுதியினர் விரைந்து சென்று கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது கோபாலகிருஷ்ணன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி, ராமசுப்பு ஆகியோர் கதவை இயந்திரம் கொண்டு அறுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். பலத்த காயங்களுடன் வெளியே வந்த கோபாலகிருஷ்ணன், மற்றொரு வீட்டிற்குள் புகுந்து, உள்புறமாக கதவை தாழிட்டு கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த கருப்பசாமி, ராமசுப்பு ஆகிய இருவரையும் உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.