பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கராச்சி,

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி (வயது 67). பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரான இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் கராச்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனை தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அவரது மகள் பக்தாவர் பூட்டோ சர்தாரி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சர்தாரியின் நுரையீரல்கள் அருகே நீர் கோர்த்திருக்கிறது. இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன் சிகிச்சை எடுத்து கொண்டார்.

கொரோனா பாதிப்புக்கு பின்னர் இந்த உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனாலேயே அவரால் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் செல்ல முடியவில்லை. ஆனால், அவருக்கு பதிலாக அந்த பகுதிகளுக்கு நேரில் செல்ல கூடிய மகள்களை பெற்றதற்காக அவர் ஆசீர்வதிக்கப்பட்டு உள்ளார். உங்களது அனைத்து செய்திகளுக்கும் மற்றும் வேண்டுதல்களுக்கும் நன்றி என தெரிவித்து கொண்டார்.

கடந்த ஜூலையில் துபாய்க்கு பயணம் மேற்கொண்ட சர்தாரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்து கொண்டார். கடந்த ஆண்டும், மருத்துவர்கள் அறிவுரையின்படி கராச்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதற்கு முன்னர், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபரில் கராச்சியில் கிளிப்டன் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி மற்றும் ரத்த சர்க்கரை அளவு குறைந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெற்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.