நான் காவி சேலை கட்டினால் உங்களுக்கு என்ன?… குஷ்பு ஆவேசம்

கோவை சரளா, ராஜாத்தி பாண்டியன், சார்லஸ் வினோத் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஒன் வே. இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இவ்விழாவில் நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் ராஜன், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் எழில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த குஷ்புவிடம் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் குறித்து பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பு, ‘வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். உலகம் எந்த பார்வையில் பார்க்கிறதோ அதைத்தான்பார்க்க வேண்டும். அனைத்திலும் தப்பு கண்டுபிடிக்க வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும்தான் பார்ப்பேன் என்று அவர் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்றார்.

தொடர்ந்து பொன்னியின் செல்வன் படம் குறித்தும், அதன் மீது வைகக்ப்படும் விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “வரலாறு பற்றி ஆய்வு தெரியாமல் மணிரத்னம் படம் எடுத்திருக்கமாட்டார் . படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது தமிழ் படம் தெலுங்கு படம் என்று இல்லை. இது ஒரு பான் இந்தியா படம். தமிழர்களின் வரலாறை கூறியிருக்கும் படம். முகம் காட்டாமல் விமர்சனம், எதிர்கருத்து சொல்பவர்களை பற்றி கவலையில்லை” என்றார். 

செய்தியாளர்களிடம் குஷ்பு பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் ஏன் காவி உடை போட்டிருக்கிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த குஷ்பு, “இதை பார்த்தால் உங்களுக்கு காவி மாதிரி தெரிகிறதா. உங்கள் அருகில் இருப்பவரும்தான் காவி உடை போட்டிருக்கிறார். அவரிடம் ஏன் நீங்கள் கேட்கவில்லை.  பச்சை நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ உடை அணிந்து வந்தால் ஏன் அப்போது இப்படி கேட்கவில்லை. காவி என்பது நிறம் அவ்வளவுதான்” என்று கூறினார்.

முன்னதாக, திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு மணிவிழா எடுக்கப்பட்டது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய வெற்றிமாறன், “தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள்” என பேசியிருந்தார். வெற்றிமாறனின் இந்தப் பேச்சுக்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்பும் எழ ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.