இலவசங்கள் எப்படி கொடுப்பீங்க? கட்சிகளுக்கு கிடுக்குப்பிடி போட்ட தேர்தல் ஆணையம்!

இந்தியாவில் தேர்தல் அரசியலை பொறுத்தவரை ஏராளமான வாக்குறுதிகளை முன்வைத்தே கட்சிகள் களம் காண்கின்றன. குறிப்பாக தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் ஏதாவது ஒரு இலவசத்தை கட்டாயம் சேர்த்து விடுகின்றன. இது விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை ஏற்றம் காணச் செய்யும் நடவடிக்கையாக சில அரசியல் கட்சிகள் கையாண்டாலும், வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதை தடுக்க இயலவில்லை.

இதற்கிடையில் இலவசங்கள் மக்களை சோம்பேறிகளாக மாற்றுகின்றன என்பன போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெறு விமர்சனமாக மட்டுமின்றி யாரும் எதிர்பாராத வகையில் வழக்கு விசாரணையாக மாறியிருக்கிறது இலவசங்கள் தொடர்பான விவகாரம். அதாவது, தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வாக்குறுதியாக அளித்து வருவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவை என்று கூறி மூன்று பேர் அடங்கிய அமர்விற்கு மாற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த சூழலில் தான் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தேர்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரம் திரட்டப்படுவது எவ்வாறு என்பது குறித்து உண்மை தகவலை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எழுதப்பட்டுள்ள பரிந்துரை கடிதத்தில், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக போதிய தகவல்கள் விளக்கப்படாமல் இருக்கின்றன.

இதனால் நிதி நிலைத்தன்மை மீது விரும்பத்தகாத தாக்கங்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கும் வகையில் தேர்தலின் போது அளிக்கப்படும் நிதி ஆதாரத்தை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.