பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியை அனைத்து வழிகளிலும் திணிக்க முயல்கிறதென்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
கடந்த மாதம், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், ஆங்கிலம் மிகவும் அவசியமான இடங்களில் மட்டுமே பயிற்றுவிக்கும் மொழியாக இருக்க வேண்டும். அந்த நிறுவனங்களில் படிப்படியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை மாற்றாக கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாக போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் பங்களா போக்கா என்ற அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது இந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மக்கள் ஏந்தி வந்தனர். அப்போது சிலர் ஏந்தி வந்த பதாகைகளில், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், தமிழ்நாட்டிலும் திமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 15ஆம் தேதி (நாளை) போராட்டம் நடத்தப்படுமென்று திமுக இளைஞரணி செயலாளர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், திமுகவின் சமீபத்திய ஹாட் டாப்பிக்கான அமைச்சர் பொன்முடி இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் 23.20 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதது. நிரந்தர பேராசிரியர்கள்,கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறை விரைவில் தொடங்கும். உரிய தகுதி பெற்றவர்களே பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.
நாளை தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும். இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல” என்றார்.