ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 19 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து இந்த சட்டம் வரையில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்…
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை அரசு அமைக்கிறது. இந்த ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற, தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
இந்த ஆணையம், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும். உள்ளூர் ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்களுக்கு பதிவு சான்றிதழை வழங்கும். விளையாட்டின் தன்மைபடி அதை வரிசைப்படுத்தும். ஆன்லைன் விளையாட்டை வழங்குபவர்களை ஆணையம் கண்காணிக்கும். அவர்களை பற்றிய தரவுகளை பராமரிக்கும்.

அவசரச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற தேவைப்பட்டால் தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000-ஐ பயன்படுத்தவும் அரசை ஆணையம் கேட்டுக்கொள்ளும். ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்கள் மீதான புகாரை தீர்த்து வைக்கும். அதோடு, விளையாட்டின் நேரம், அதில் செலுத்தப்படும் பணத்தின் அளவு, வயது கட்டுப்பாடு, போன்றவற்றை ஆணையம் ஒழுங்குபடுத்தும். ஆன்லைன் விளையாட்டை வழங்குபவர்களுக்கு எந்தவொரு உத்தரவையும் ஆணையம் வழங்க முடியும்.
சிவில் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம் போல (சம்மன் அனுப்புவது, சாட்சி பதிவு செய்வது, ஆவணங்களை கேட்டு வாங்குவது) ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும் போது இந்த சட்டம் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM