காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பேட்டரிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோடு, சுந்தர விநாயகர் தெருவில் வெங்கட்ராமன் என்பவர் எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வழக்கம்போல் சர்வீஸ் நிலையத்தை மூடிவிட்டு சென்றுள்ளார்.
திடீரென சர்வீஸ் நிலையத்திலிருந்து புகை வந்து தீப்பற்றி எரிவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்த நிலையில் அதற்குள் மளமளவென பரவிய தீயானது, சர்வீஸ் நிலையம் முழுவதும் பரவி உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக்களும், உதிரி பாகங்களும், பேட்டரிகளும் தீயில் எரிந்து நாசமானது.
எலக்ட்ரிக் வாகனங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாகங்களால் ஆனது என்பதால், தீ கொழுந்து விட்டு எரிந்ததை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் சர்வீஸ் நிலையத்தில் இருந்த 50 லட்சம் ரூபாய்க்கும் மேலான எலக்ட்ரிக் பைக்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.
சர்வீஸ் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்ததும்,அதனால் அப்பகுதியில் ஏற்பட்ட கரும்புகை மூட்டத்தாலும் அப்பகுயினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.