ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் கலால் போலீசாரின் அதிரடி சோதனையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போதை பொருள் தடுப்பு குறித்து அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தின் முக்கிய மலை பகுதியான திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சேம்பரை கிராமத்தில் சாராய ஊறல் இருப்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து புதர்களின் மறைவில் பெரிய பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 1000 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர்.