கிராம உதவியாளர் பணியிட நியமனம்: மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிட நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரையில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும், 2016 பிரிவு 34ன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தி பணி நியமன ஆணை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் பி.வீரமணி (மாநகர்), கே.தவமணி (புறநகர்) தலைமை வகித்தனர். அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாலமுருகன் (மாநகர்), வி.மாரியப்பன் (புறநகர்) முன்னிலை வகித்தனர். இதில், அச்சங்கத்தின் மாநில செயலாளர் பி.ஜீவா, மாநில துணைச் செயலாளர் எம்.சொர்ணவேல், மாநகராட்சி உறுப்பினர் டி.குமரவேல், மாவட்ட பொருளாளர்கள் வி.மாரியப்பன், சின்னகருப்பன், மாவட்ட உதவி தலைவர் பாண்டி, பழனியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.