என்னை சீண்டிப் பார்க்க வேண்டாம் – குஷ்பு ஆவேசம்

திமுகவை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழக கவர்னர் பற்றியும், நடிகையும், பாஜக.,வை சேர்ந்தவருமான குஷ்புவையும் தகாத வார்த்தைகளில் பேசினார். இதுதொடர்பான வீடியோ வைரலாக பலரும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து திமுக., நீக்கியது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சென்னையில் நிருபர்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான நடிகை குஷ்பு கூறியதாவது: பெண்களை இழிவாக பேசுவோரை முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும். என்னை சீண்டிப்பார்க்க வேண்டாம். தி.மு.க.,வினர் அவதூறாக பேசுகின்றனர். இதற்காகவே கட்சியில் சேர்க்கின்றனர். கருணாநிதி தலைமையிலான தி.மு.க.,விற்கும், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,விற்கும் வித்தியாசம் உள்ளது. அது தான் திராவிட மாடல் போல.

பெண்ணாக சொல்கிறேன் என்னை சீண்டிப் பார்க்காதீங்க, தாங்க மாட்டீங்க. பெண்கள் குறித்து தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது. பெண்களுக்கு பிரச்னை என்றால் நான் நிற்பேன். பெண்களை கேவலமாக பேசுவதை நிறுத்துங்கள். பெண்கள் குறித்து திமுக மட்டும் அல்ல வேறு எவர் பேசினாலும் தவறு தான். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.

இவ்வாறு குஷ்பு ஆவேசமாக பேசினார். இடையில் அவர் பேசும்போது கண்கலங்கவும் செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.