சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் உத்தரவு… சேதமடைந்த கட்டடங்கள் லிஸ்ட்… சரியா ஒரு மாசம் டைம்… ஆக்‌ஷனில் ஆட்சியர்கள்!

தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுக் கட்டடங்கள், இதர கட்டுமானங்கள் சேதமடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேதமடைந்த, சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் இதர கட்டுமானங்களை கண்டறிவது மிகவும் அவசியம்.

தென்மேற்கு பருவமழை ஆரம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு!

கவனம் செலுத்த வேண்டிய கட்டுமானங்கள்

சேதமடைந்துள்ள பொதுக் கட்டடங்கள்,பள்ளிகள்,கல்லூரிகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள்,மருத்துவமனைகள்,அங்கன்வாடி மையங்கள்,விடுதிகள்,பேருந்து நிலையங்கள்,அலுவலக கட்டடங்கள்,மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்,பாலங்கள்

முழுமையான கணக்கெடுப்பு

ஆகியவை குறித்து ஒருங்கிணைந்த மதிப்பீடு மற்றும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதையொட்டி சேதமடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் முகமைகள் உடன் ஒருங்கிணைந்து அனைத்து பொது மற்றும் அரசு கட்டடங்கள், இதர உள்கட்டமைப்புகளை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். அவற்றில் சேதமடைந்துள்ள, சிதிலமடையும் தருவாயில் உள்ளவற்றை உறுதி செய்து மேல் நடவடிக்கைக்கு அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

பழுதுநீக்க ஏற்பாடுகள்

ஒருவேளை கட்டமைப்புகளின் உறுதி தன்மை உறுதியாக இருப்பது கண்டறியப்பட்டால் பழுதுநீக்க நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும். மேலும் சிதிலமடைந்த கட்டமைப்புகள், அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ள கட்டடங்களை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

சிறப்பு கவனம்

சேதமடைந்த, சிதிலமடைந்த கட்டடங்களில் உரிய பழுதுநீக்கும் பணிகள் அல்லது மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளும் வரை அவற்றை பயன்படுத்துவதை தடை செய்வதை தெளிவாக அறிவிக்க வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த பொது இடங்களான பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், மருத்துவமனைகள், ஆரம்ப நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் இதர முக்கிய கட்டமைப்புகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

பருவமழை தொடக்கம்

இத்தகைய பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாக வருகிற 30.09.2023-க்குள் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து பொதுமக்களின் நலன் காக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் கண்டறியப்பட்டுள்ள கட்டடங்களில் பழுதுநீக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட கட்டடங்கள், சிதிலமடைந்து இடிக்கப்பட்ட கட்டடங்கள் ஆகியவை குறித்து ஒரு விரிவான அறிக்கையை கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

ஆய்வும், அறிக்கையும்

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது தலையாய கடமை. இதை உணர்ந்து சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு செய்து, மேற்குறிப்பிட்ட நடவடிவக்கைகள் தொடர்பான அறிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.