ஆற்றொண்ணா துயரம்… நடிகர் மாரிமுத்து மரணம்… முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உருக்கம்!

பிரபல சினிமா இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து தமிழ் சினிமாவில் இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்ஜே சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கியுள்ளார் மாரிமுத்து. அதுமட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார் மாரிமுத்து.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் மெகா தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். அவரது ஆதிமுத்து குணசேகரன் காதப்பாத்திரம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அவரின் மிரட்டலான நடிப்புக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் இன்று காலை டப்பிங் பணியில் இருந்த மாரிமுத்துவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக அருகில் இருந்த சக நடிகரன கமலேஷிடம் கூறிவிட்டு வெளியே சென்ற மாரிமுத்து, தானே காரை ஓட்டிகொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து மரணமடைந்தார்.

57 வயதான மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலுக்கு பிறகுதான் பெரும் பிரபலம் ஆனார். இந்நிலையில் அவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரைத்துறையினர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரான சி விஜயபாஸ்கர் மாரிமுத்துவின் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், திரைப்பட உதவி இயக்குநர், இயக்குநர், நடிகர் என தன் திறமையால், நீண்டகால உழைப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்த திரைக்கலைஞர் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் மறைவெய்திய செய்தி துயரத்தை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எளிய மக்களின் அன்பை பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல; அதற்குப் பின்னால் இருக்கும்

உழைப்பு அசாத்தியமானது என்றும் குறிப்பிட்டுள்ள விஜயபாஸ்கர், அந்த உழைப்பின் பயனை, மகிழ்ச்சியை அடைவதற்குள் மறைவெய்தியது ஆற்றொண்ணா துயரம் என்றும் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல் என்றும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.