நடிகர் விஜய், தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருக்கிறார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அவரது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்ததில் இருந்து விஜய்யின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
‘விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி புஸ்லி ஆனந்த் தலைமையில் மன்ற நிர்வாகிகள் டீம் மூலம் இன்று தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்திருக்கிறார் விஜய். இதுகுறித்து மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரிடம் பேசினேன்.
”இன்று டெல்லியில் கட்சியின் பெயரை பதிவு செய்யப் போவது குறித்து சில நாட்களுக்கு முன்னரே எங்களுக்கு தகவல் வந்துவிட்டது. அதிகாரப் பூர்வமாக கட்சி தொடங்குவது குறித்த முடிவை தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளிடம் விஜய்யே நேரடியாகச் சொல்லியிருக்கிறார். தவிர கட்சியின் பெயர் அறிவித்த அடுத்த விநாடியே மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுங்கள் என்றதுடன் இன்று காலை 11.30 மணிக்குள் கட்சியின் பெயரை அறிவித்துவிடுவார்கள்.. ஆகவே மன்றத்தினரிடம் ‘இனிப்பு வாங்கி வைக்க சொல்லுங்க..’ கட்சி பெயரை அறிவித்ததும் மக்களிடம் இனிப்பு வழங்குகள். தொடர்ந்து நலத் திட்ட உதவிகளையும் அமல்படுத்துங்கள் என விஜய் சொல்லியிருந்தார்.

அதனால் இன்று காலை முதலே இனிப்புகளை வாங்கி வைத்து அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் 12 மணிக்கு மேலாகத்தான் அறிவிப்பு வெளியானது. தலைவர் இன்னும் அடுத்த படத்தில் கமிட் ஆகவில்லை. ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படப்பிடிப்பில் மட்டுமே இப்போது கவனம் செலுத்துகிறார். இந்த நாடாளு மன்ற தேர்தலில் போட்டியில்லை. சட்டமன்ற தேர்தலுக்காக இப்போதே தயாராவோம் என்றும் சொல்லியிருந்தனர். மன்ற கட்டளைக்காக இனிப்புகளை வழங்கி வருகிறோம்.
விரைவில் மாநாடு அறிவிக்க உள்ளார். இப்போது மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். திருச்சியும் பரிசீலனையில் உள்ளது. விரைவில் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளார் விஜய்” என்கிறார்கள் மன்ற நிர்வாகிகள்