'தலைவர் தரிசனம்' : நெகிழும் மஞ்சும்மேல் பாய்ஸ் வாரிசு நடிகர்

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியானது. கிட்டத்தட்ட முற்றிலும் புது முகங்கள், குறைந்த பட்ஜெட் என்கிற அளவில் வெளியான இந்த படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இங்கே கமல்ஹாசன், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்தும் மஞ்சும்மேல் பாய்ஸ் படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகின.

படத்தில் இடம்பெற்ற நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக நடித்தவர் சந்து சலீம்குமார். இவர் பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் சலீம்குமாரின் மகன் என்பது கூடுதல் தகவல். மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் அந்த 10 பேர்களில் ஒரே ஒருவர் மட்டும் அவ்வப்போது தனித்து சென்று ஞானியை போன்று உட்கார்ந்து கொண்டு எதுவும் பேசாமல் திகில் கிளப்புவாரே அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இந்த சந்து சலீம் குமார்.

இந்தநிலையில் ரஜினியுடனான இந்த சந்திப்பு குறித்து 'தலைவர் தரிசனம்' என நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் சந்து சலீம்குமார். அதில் “இந்த சந்திப்பின்போது என்னை பார்த்த ரஜினிகாந்த், நீங்க மேலே உட்கார்ந்து இருக்க அந்த பையன் தானே.. ரொம்ப புடிச்சது அந்த கேரக்டர் என்று சரியாக அடையாளம் கண்டுபிடித்து தோளில் தட்டி பாராட்டினார்” என்று கூறியுள்ளார். மேலும் இவரது தந்தை தான் நடிகர் சலீம்குமார் என்பதை தெரிந்து கொண்டு, “அப்பாவும் ரொம்ப நல்லா பண்றாரு.. காட் பிளஸ் யூ” என்றும் பாராட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.