காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 28 பேர் பலி

டெய்ர் அல்-பாலா (காசா முனை),

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள், 1 பெண் உள்பட 28 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தெற்கு நகரமான கான் யூனிசில் உள்ள நாசர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.