“உக்ரைனின் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய மாதம் 7 பில்லியன் டாலர்கள் தேவை ” – ஜெலென்ஸ்கி

ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுசெய்ய, மாதம் 7 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உலக வங்கி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய ஜெலென்ஸ்கி, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச நிதி நிறுவனங்களில் இருந்து ரஷ்யாவை உடனடியாக விலக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் ரஷ்யர்களின் சொத்துக்களை முடக்கி பொருளாதார தடை விதித்த நாடுகள், அந்த பணத்தை வைத்து போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனை மீண்டும் கட்டமைக்க உதவ வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக கூட்டத்தில் பேசிய உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ், ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனின் கட்டிடங்கள், உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் 60 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்றும் போர் தொடரும் பட்சத்தில் அது மேலும் உயரக்கூடும் என்றும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.