பொன்னியின் செல்வன் முதல்நாள் வசூல் : தமிழில் புதிய சாதனை

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஐஸ்வர்ய லட்சுமி, விக்ரம் பிரபு, ஜெயராம் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.

கல்கி எழுதிய நாவலை படமாக்கியுள்ளதால் இப்படத்திற்கு தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இப்படம் பெரும் ஆவலைத் தூண்டியது. அதற்கு சாட்சியாக இப்படத்திற்கான முன்பதிவு சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் நேற்று படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து செல்வதை காண முடிந்தது. அதிகாலை 4.30 மணிக்கே தமிழகத்தில் பல ஊர்களில் காட்சிகள் திரையிடப்பட்டன. வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு சிறப்பான முன்பதிவு இருந்தது. இதனால் படத்தின் வசூல் சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டது. முதல்நாளில் இந்தபடம் ரூ.50 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் முதல்நாளில் அதிக வசூல் சாதனை தமிழ் படங்களில் பொன்னியின் செல்வன் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதற்கு அடுத்து ரஜினியின் 2.0 ரூ.63 கோடி வசூல் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் இந்தியாவில் அதிக வசூல் சாதனை செய்த படங்களில் ஆர்ஆர்ஆர், பாகுபலி, கேஜிஎப் 2 படங்களின் சாதனையை இந்த படம் முறியடிக்கவில்லை. இந்த மூன்று படங்களுமே ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூல் செய்தன. இந்த மூன்று படங்களுமே தென்னிந்திய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.