ஸ்பெஷல் கிளாஸ்… தனியார் பள்ளிகளுக்கு அரசு அதிரடி உத்தரவு!

தேர்வு முடிவடைந்துள்ளதையடுத்து, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 -13 ஆம் தேதி வரையிலும், 6 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதி முடியவும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுல்ளது.

இந்த நிலையில் விடுமுறை நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக பள்ளிக் கல்வித் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து, பள்ளிக் கல்வித் துறை இன்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘ தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேண்டுமானால், தேவைப்பட்டால் மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியோடு, அரை நாள் மட்டும் சிறப்பு வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம்’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு இப்படி என்னதான் உத்தரவு போட்டாலும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பண்டிகை விடுமுறை, தேர்வு விடுமுறை, வார விடுமுறை என எந்த விடுமுறையையும் கருத்தில் கொள்ளாமல், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. இது மாணவர்களின் பெற்றோருக்கு நன்றாகவே தெரியும்.

பொதுத் தேர்வில் தங்களது பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில், பள்ளி நிர்வாகத்தின் விடுமுறை தின சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க தான் செய்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை யாரும் கருத்தில் கொள்வதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.