சீனாவின் ஆதிக்கத்திற்கு கனடா கடிவாளம்; ராணுவத்தை மேம்படுத்த முடிவு.!

இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில், கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜி – 20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டுக்கு இடையே உலகத் தலைவர்கள், இரு நாடுகள் விவகாரம் குறித்து தனியாகவும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது, சீன அதிபர் ஷி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் ஆலோசனை நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறுகையில், “நாம் இருவரும் ஆலோசனை நடத்தியதை பேப்பரில் கசிய விடுகிறீர்கள். இது முறையானது அல்ல. ஆலோசனை நடத்திய விதம் அப்படி அல்ல. உங்களிடம் நேர்மை இருந்தால் பரஸ்பர மரியாதையுடன் நாம் நன்றாகத் தொடர்பு கொள்ளலாம், இல்லையெனில் முடிவுகள் அவ்வளவு எளிதாக இருக்காது” என்று கூறுகிறார்.

அதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “நாங்கள் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் தைரியமான பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதையே நாங்கள் தொடர்ந்து நடத்துவோம். நாம் ஆக்கப்பூர்வமாக பணியாற்றுவதை தொடர்வோம்,” என தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஏற்கனவே கனடா தேர்தலில் உளவு பார்த்தல் மற்றும் சீனாவின் தலையீடுகள் குறித்து ட்ரூடோ “கடுமையான கவலைகளை” கொண்டு வந்ததாக ஊடகச் செய்திகள் வெளியாகின. அதன்பின் தான் ஜின்பிங்கின் அதிருப்தி தெரிவித்து இருக்கலாம் என கூறப்பட்டது.

இந்தநிலையில் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டு, குறிப்பிட்ட பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக 1.7 பில்லியன் டாலர் நிதியை கனடா அரசு ஒதுக்கியுள்ளது.

கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி, நேற்று தனது நாட்டின் இந்தோ-பசிபிக் வியூகத்தை வெளியிட்டார். இதில் குறிப்பிட்ட பிராந்தியத்தில் அதிக கடற்படை ரோந்து, சிறந்த உளவு தகவல்கள், இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் உள்ள பிராந்திய நண்பர்களுடன் அதிகரித்த ஒத்துழைப்பிற்காக மேற்கூறப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சர்வதேச அரசியல் நிலை மாறிவருவதாகவும், வல்லாதிக்க நாடுகளின் அச்சுறுத்தல் காரணமாகவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தோ – பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை யாராலும் மறுக்க முடியாது. எனவே ராணுவம் மற்றும் வர்த்தக ரீதியாக அதை எதிர்கொள்ள நிதி ஒதுக்கப்படுவதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜி-20 மாநாட்டில் சீனா மற்றும் கனடா இடையே இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு சரியாக இரண்டு வாரங்கள் கழித்து, இப்படி ஒரு அறிவிப்பை கனடா அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.