`பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பில் விபத்து; விஜய் ஆண்டனிக்கு விரைவில் அறுவை சிகிச்சை!

விபத்துக்குள்ளான நடிகர் விஜய் ஆண்டனி இன்று அறுவை சிகிச்சைக்காக சென்னை வர இருக்கிறார்.

நடிகர் விஜய் ஆண்டனி தான் இயக்கி நடிக்கும் `பிச்சைக்காரன் 2’ படத்திற்கான படப்பிடிப்பை, மலேஷியாவில் நடத்தி வந்தார். இரு தினங்களுக்கு முன் லங்கா தீவில் சேசிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. கடலில் படகை வேகமாக ஓட்டிச் சென்ற விஜய் ஆண்டனி எதிர்பாராத விதமாக இன்னொரு படகில் மோதி விபத்துக்குள்ளானார். இதனால் முகம் மற்றும் வாய் பகுதிகளில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சுய நினைவிழந்து கடலில் மூழ்கிய அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தது படக்குழு.

image

தீவிரமான சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ஆண்டனியின் நண்பரும், தயாரிப்பாளருமான தனஞ்ஜெயன் இந்த விபத்தைப் பற்றி ட்விட்டரில், “விபத்தினால் ஏற்பட்ட காயத்திலிருந்து விஜய் ஆண்டனி விரைவாக மீண்டு வருகிறார். லங்காவியில் உள்ள மருத்துவமனையில் அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருடைய குடும்பத்தினர் லங்காவியில் அவருடன் இருக்கின்றனர். அவரை சென்னைக்கு அழைத்து வருவது பற்றிய முடிவை அவர்கள் எடுப்பார்கள். விஜய் ஆண்டனி விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்திப்போம்” எனத் பதிவிட்டிருந்தார்.

image

மேலும் வாய் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள், சென்னை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வதாக விஜய் ஆண்டனி கூறியியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இன்று (18.1.2023) லங்காவில் இருந்து கோலாலம்பூர் சென்று, அங்கிருந்து இன்றிரவு விஜய் ஆண்டனி சென்னை வந்தடைவார் என கூறப்படுகிறது. சென்னையில் பிரபல மருத்துவமனையில் விஜய் ஆண்டனிக்கு சிகிச்சை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.